லோக் ஆயுக்தா நீதிமன்றங்களை அமைக்காத தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி - 2 வாரத்திற்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவு
Mar 23 2018 5:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், லோக் ஆயுக்தா நீதிமன்றங்களை அமைக்காதது குறித்து இன்னும் 2 வாரங்களில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த அமைப்புகளை உருவாக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்ததையடுத்து, அதுதொடர்பான சட்டம் கடந்த 2013-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
எனினும், தமிழகம், புதுச்சேரி உட்பட 12 மாநிலங்களில் இதுவரை லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. இதனிடையே, நாடு முழுவதும் லோக் ஆயுக்தா தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் இதுவரை லோக் ஆயுக்தா நீதிமன்றங்களை அமைக்கவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த லோக் ஆயுக்தா நீதிமன்றத்தை இதுவரை அமைக்காதது ஏன் என சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், லோக் ஆயுக்தா நீதிமன்றங்கள் ஏன் அமைக்கப்படவில்லை என்பது தொடர்பாக 12 மாநிலங்களும் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், லோக் ஆயுக்தா நீதிமன்றங்கள் அமைக்க இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும், 2 வாரத்துக்குள் பிரமாணப் பத்திரத்தை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.