11 ஆயிரத்து 700 கோடி ரூபாய் வங்கி பணம் மோசடி - விபுல் அம்பானி உள்ளிட்ட 6 பேரை கட்டுபாட்டில் எடுத்து சிபிஐ தீவிர விசாரணை
Feb 22 2018 1:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11 ஆயிரத்து700 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடியின் நிறுவனத்தில் பணியாற்றிய அம்பானியின் உறவினர் விபுல் அம்பானி உள்ளிட்ட 6 பேரை மார்ச் 5-ம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் 11 ஆயிரத்து 700 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தை தொடர்ந்து, அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு தப்பியுள்ள அவர்களை, இந்தியா அழைத்து வர சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது.
நீரவ் மோடிக்கு உடந்தையாக செயல்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் 3 பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வங்கி பணமோசடி தொடர்பாக நீரவ் மோடிக்கு சொந்தமான பயர் ஸ்டார் வைர நிறுவனத்தில் தலைமை நிதித்துறை தலைவராக பணியாற்றி வரும் திருபாய் அம்பானியின் மருமகன் விபுல் அம்பானி உட்பட மேலும் 6 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இதனைதொடர்ந்து அவர்கள் அனைவரும் மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மார்ச் 5-ம் தேதி வரை சிபிஐ கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் மீது, 2011 முதல் 2017-ம் ஆண்டு வரை 150 வாக்குறுதி கடிதங்கள் அளித்து 6 ஆயிரத்து 498 கோடி ரூபாய் மற்றும் 143 வாக்குறுதி கடிதங்கள் அளித்து 4 ஆயிரத்து 886 கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடி செய்தது தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, மும்பை கல்யாண் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரிகள் வீடுகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.