லோக்பால் - லோக் ஆயுக்தா சட்டங்களை முறைப்படி கொண்டு வந்து செயல்படுத்தி இருந்தால் வங்கி மோசடிகள் ஏற்பட்டிருக்காது : மத்திய அரசு மீது சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றச்சாட்டு
Feb 21 2018 12:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்களை முறைப்படி கொண்டு வந்து செயல்படுத்தி இருந்தால் வங்கி மோசடிகள் ஏற்பட்டிருக்காது என மத்திய அரசு மீது சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார்.
குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி, ரோட்டோமேக் பேனா தொழிற்சாலையின் உரிமையாளர் விக்ரம் கோத்தாரி, அம்பானியின் உறவினர் விபுல் அம்பானி போன்றோர் வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்றுவிட்டு மோசடி செய்திருக்கும் விவகாரம், நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதுதொடர்பாக ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் அன்னா ஹசாரே, மாஹாராஷ்டிரா மாநிலம் Ahmednagar-ல் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார். லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும், அதனை, நாங்கள் வரைவு செய்தபடி சட்டமாக்கி செயல்படுத்தி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்த அன்னா ஹசாரே, ஆனால் அரசியலில் உள்ளவர்கள் அதனை விரும்பவில்லை என கூறினார். 2011-ம் ஆண்டே லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்களை அமல்படுத்தி இருந்தால் இப்போது நடைபெற்றுள்ளதை போன்று மோசடிகள் நடந்து இருக்காது என குறிப்பிட்ட அன்னா ஹசாரே, ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று கூறுபவர்கள் அதற்காக எதுவும் செய்யாமல் இருக்கிறார்கள் என்று மறைமுகமாக மத்திய அரசை குற்றம் சாட்டினார்.