பங்குச் சந்தை வரலாற்றில் முதன்முறையாக மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 36 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை
Jan 23 2018 1:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பங்குச் சந்தை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக இன்று காலை மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 36 ஆயிரம் புள்ளிகளுக்கும் அதிகமாக வர்த்தகம் நடைபெற்று உச்சத்தை எட்டியது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையிலும் நிஃப்டி 11 ஆயிரம் புள்ளிகளுக்கும் அதிகமாக வர்த்தகம் நடைபெற்று உச்சத்தை தொட்டது.
அன்னிய முதலீடு காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று நடைபெற்ற வர்த்தகம், தொடர்ந்து 4-வது நாளாக புதிய சாதனை உச்சத்தை தொட்டு நிறைவடைந்தது. பல்வேறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு, முன்னணி நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை முடிவுகள் ஆகியவை பங்குச் சந்தைகளில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், மத்திய பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பும் பங்குச் சந்தையின் ஏற்றத்திற்கு வலுசேர்த்தது. இதனையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில், சென்செக்ஸ் 286 புள்ளிகள் அதிகரித்து, 35 ஆயிரத்து 868 புள்ளிகள் என்ற சாதனை உச்சத்தை எட்டியது.
இந்நிலையில், மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் இன்று காலை புதிய உயர்வுடன் தொடங்கியது. மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 238 புள்ளிகள் உயர்ந்து, இதுவரை இல்லாத வகையில், 36 ஆயிரத்து 52 புள்ளிகளாகவும், தேசிய பங்குசந்தை நிஃப்டி 79 புள்ளிகள் அதிகரித்து 11 ஆயிரத்து 46 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63 ரூபாய் 81 காசுகளாக இருந்தது.