சத்தீஸ்கரில் 11 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் : ஆதாயம் தரும் இரட்டை பதவியில் இருப்பதாக காங்கிரஸ் புகார்
Jan 23 2018 1:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சத்தீஸ்கரில், இதேபோல் ஆதாயம் தரும் இரட்டை பதவி வகித்து வரும் 11 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் உள்ளதாகவும், அவர்களை ஏன் தகுதி நீக்கம் செய்ய கூடாது என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியில் உள்ள 20 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். இதற்கு முதலமைச்சர் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இது ஜனநாயக படுகொலை என்றும் விமர்சித்திருந்தார்.
இதனிடையே, பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் சத்தீஸ்கரில், இதே போல் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் ஆதாயம் தரும் இரட்டை பதவியில் உள்ளதாகவும், அவர்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ், இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 90 எம்.எல்.ஏ.க்களில் 49 எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க. ஆட்சி நடத்தி வருகிறது. அவர்களில் ஆதாயம் தரும் இரட்டை பதவிகளில் உள்ள 11 பேர் பதவி பறிபோனால், பா.ஜ.க. ஆட்சி கவிழும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே. காங்கிரசின் கோரிக்கையால் சத்தீஸ்கர் பா.ஜ.க. அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, தகுதி நீக்கத்தை எதிர்த்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தொடர்ந்த வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. இவ்விகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும் ஆம் ஆத்மி தயாராகி வருகிறது.