புதுச்சேரியிலும் பேருந்துக் கட்டணம் உயர்வு : விரைவுப் பேருந்துகளுக்கு மட்டும்தான் கட்டண உயர்வு- உள்ளூர் பேருந்துகளுக்கு கட்டண உயர்வு இல்லை என மாநில அரசு அறிவிப்பு
Jan 23 2018 12:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு விரைவுப் பேருந்துகளுக்கு மட்டும்தான் என்றும், உள்ளூர் பேருந்துகளுக்கு கட்டண உயர்வு இல்லை என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக புதுச்சேரி அரசு அங்கிருந்து தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அங்கிருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்துக் கட்டணம், சாதாரண பேருந்துகளுக்கு 100 ரூபாயிலிருந்து 140 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளுக்கு 200 ரூபாயிலிருந்து 315 ரூபாயாகவும், திருப்பதிக்கு இயக்கப்படும் சாதாரண பேருந்துக் கட்டணம் 170 ரூபாயிலிருந்து 290 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கான கட்டணம் 215 ரூபாயிலிருந்து 290 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அம்மாநிலப் போக்குவரத்துறை அமைச்சர் திரு. ஷாஜகான், அண்டை மாநிலங்களில் பேருந்துகளுக்கு கட்டணம் உயர்த்தப்படும்போது தங்கள் மாநிலத்திலும் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படும் என்றும், இது வழக்கமான நடைமுறை என்றும் கூறினார்.
புதுச்சேரி அரசு, விரைவுப் பேருந்துகளுக்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளபோதிலும், உள்ளூர் பேருந்துகளுக்கு எந்தக் கட்டண உயர்வும் இல்லை என அறிவித்துள்ளது.