காங்கிரஸ் தலைவராக பதவியேற்றார் ராகுல் காந்தி - மக்களுக்கு நன்மை செய்யவே வந்துள்ளதாக உரை - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து
Dec 16 2017 2:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியிடமிருந்து ராகுல் காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
உடல்நலக் குறைவு காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சோனியா காந்தி பதவிவிலக முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் புதிய தலைவராக ராகுல்காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 4ம் தேதி அவர் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு எவரும் மனுத்தாக்கல் செய்யாததால், ராகுல் கட்சித் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியானது. ராகுல் காந்திக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், பொறுப்பாளர்களும் வாழ்த்து தெரிவித்தனர். கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில், ராகுல் கட்சித் தலைவராக முறைப்படி பொறுப்பேற்கும் நிகழ்ச்சி டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் புதிய தலைவராக ராகுல் காந்தி பதவியேற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி புதிய உத்வேகத்துடன் செயல்படும் என வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் உரையாற்றிய சோனியா காந்தி, ராகுலுக்கு தனது ஆசியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியையொட்டி, கட்சி அலுவலகம் முன்பாக தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
ராகுல் காந்தி உறுதி
காங்கிரஸ் கட்சித் தலைமை பொறுப்பேற்ற பின்னர் நன்றி தெரிவித்து பேசிய ராகுல் காந்தி, பாரதிய ஜனதா அரசின் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்தார். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளிலிருந்து காங்கிரஸ் ஒருபோதும் பின்வாங்காது என்றும் அவர் உறுதி அளித்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவியேற்ற பின்னர் உரையாற்றுகையில், பாரதிய ஜனதா அரசின் கொள்கைகளையும், செயல்பாடுகளையும் வன்மையாகச் சாடினார். இந்த ஆட்சி மக்களின் நலனுக்காக செயல்படவில்லை என்றும், மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்க உரிமை மறுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அதிகார பலத்தை கொண்டு வெற்றிபெறலாம் என்று பாரதிய கருதுவதாக குறிப்பிட்ட அவர், மக்களுக்கு நன்மை செய்யவே தாம் அரசியலுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டார். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளிலிருந்து காங்கிரஸ் ஒருபோதும் பின்வாங்காது என்றும் ராகுல் திட்டவட்டமாக தெரிவித்தார்.