வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதற்கும் நீட் தேர்வு கட்டாயமாகுமா? - மத்திய அரசு தீவிர பரிசீலனை
Aug 19 2017 9:04AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கும், நீட் தேர்வை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் பல்வேறு காரணங்களை முன்வைத்து, எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் வெளிநாடுகளில் மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என்பதை கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனைகள் தொடங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தற்போதுள்ள சட்ட விதிகளின் படி வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று திரும்பும் மாணவர்கள், இந்தியாவில் டாக்டர்களாக பணியாற்ற விரும்பினால், அதற்கு F.M.G.E. எனப்படும் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் தேர்வை எழுதவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் 10 முதல் 15 சதவீத மாணவர்களே தேர்ச்சி பெறுகின்றனர். இந்த நிலைமையை மாற்ற வெளிநாடுகளுக்கு செல்லும் முன்பே நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற புதிய முறையை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.