காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவிய விவகாரம் - இந்தியா கடும் கண்டனம்
Aug 19 2017 7:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் லடாக்கில் உள்ள பாங்கோன் பகுதியில், கடந்த 15-ந்தேதி காலை இந்தியா எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்றது. சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது இந்தியா - திபெத் எல்லை பாதுகாப்பு படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நேரத்தை பயன்படுத்தி சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றனர்.
இதற்கு பாதுகாப்பு படையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தால், சீன ராணுவத்தினர் பின்வாங்கினர். பின்னர் தங்களது எல்லைக்குள் திரும்பிய அவர்கள், பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்தியா தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் இருதரப்பிலும் பலர் காயம் அடைந்தனர்.
இதனிடையே, சீனாவின் இந்த அத்துமீறலுக்கு இந்திய அரசு தனது அதிகாரபூர்வ கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் திரு. ரவீஷ்குமார், லடாக் பகுதியில் சீன ராணுவத்தினரின் ஊடுருவலை அவர் உறுதி செய்தார். மேலும், இரு நாடுகளின் எல்லையிலும் அமைதி பராமரிக்கப்படவேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இரு தரப்பினரின் நலன்களுக்கும் உகந்தது அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
சிக்கிம் எல்லையில் இந்தியா, பூடான், சீனா ஆகிய நாடுகளின் முச்சந்திப்பில் உள்ள டோக்லாம் பகுதியில் இந்தியாவும், சீனாவும் ராணுவத்தை குவித்துள்ள பதற்றமான நிலையில் காஷ்மீருக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றதை இந்தியா வன்மையாக கண்டித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.