மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை: விரைவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தகவல்
Apr 30 2017 10:33AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து தெரிவிப்பதற்காக, விரைவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் திரு.நசீம் ஜைதி தெரிவித்தார்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீதான நம்பகத்தன்மை, சந்தேகத்துக்கு உரியதாக இருப்பதாகவும், எனவே தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்றும், பல எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து உள்ளன. இதுதொடர்பாக சமீபத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், இதனை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்து வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியாது என்று உறுதியாக கூறி வருகிறது.
இந்த நிலையில் சண்டிகரில் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, தேர்தல் ஆணையம் சார்பில் விரைவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து விளக்கம் அளிக்க உள்ளதாகவும், அப்போது அரசியல் கட்சியினர் மின்னணு இயந்திரங்கள் எந்த வகையில் நம்பகத்தன்மையற்றவை? என்பதை நிரூபிக்கலாம் என தெரிவித்தார்.
மேலும் யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் புதிய கருவி ஒன்றை வைக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். சில தொகுதிகளில் நடந்த தேர்தல்களில், இது பரீட்சார்த்த முறையில் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த புதிய கருவி வாங்க நிதி பெறப்பட்டு 15 லட்சம் கருவிகள் வாங்க தீர்மானித்து, 2 நிறுவனங்களுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளதாகவும், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் இந்த கருவிகள் கிடைக்கும் என்றும், இனிவரும் தேர்தல்களில், இந்த கருவி பயன்படுத்தப்படும் என்றும் நஜீம் ஜைதி தெரிவித்தார்.