ஜல்லிக்கட்டு பிரச்சனைக்கு தீர்வுகாண நிர்வாக ரீதியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால், ஜல்லிக்கட்டு வழக்கில் ஒரு வாரத்திற்கு தீர்ப்பு வழங்க வேண்டாம் என மத்திய அரசு கோரிக்கை : உச்சநீதிமன்றம் ஏற்பு
Jan 20 2017 3:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்தில், மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொண்டு அவசர சட்டமாக பிறப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு வழக்கில் ஒரு வாரத்திற்கு தீர்ப்பு வழங்க வேண்டாம் என மத்திய அரசு விடுத்த வேண்டுகோளை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
தமிழர்களின் பண்டைய நாகரிகம், கலாச்சாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் ஜல்லிக்கட்டு எவ்வித இடையூறுமின்றி நடத்தப்படும் வகையில், மத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்தில், மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து, டெல்லியில் சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் விவாதித்தார். அதனடிப்படையில், மத்திய அரசின் மிருகவதை தடுப்புச் சட்டத்திற்கு மாநில திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டு, இந்த சட்டத் திருத்தத்தை ஒரு அவசர சட்டமாக பிறப்பிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் திரு. Mukul Rohatgi, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் கோரிக்கை ஒன்றை வைத்தார். ஜல்லிக்கட்டு பிரச்சனைத் தொடர்பாக தமிழக முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம், டெல்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளதாகவும், தமிழகத்தில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தீர்வுகாணும் வகையில், அவசர கதியில் நிர்வாக ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், ஜல்லிக்கட்டு வழக்கில் ஒரு வாரத்திற்கு தீர்ப்பு வழங்க வேண்டாம் என்றும் மத்திய அரசு சார்பில் கேட்டுக்கொண்டார். மத்திய அரசின் இந்த கோரிக்கையை, நீதிபதி திரு. தீபக் மிஸ்ரா தலைமையிலான இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏற்றுக்கொண்டது.