பதினோரு லட்சத்து 55 ஆயிரம் கோடி பழைய ரூபாய் நோட்டுகள் வங்கியில் டெபாசிட் - ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் தகவல்
Dec 7 2016 9:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதையடுத்து, இதுவரை 11 லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பழைய ரூபாய் நோட்டுகள், வங்கியில் டிபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியின் துணை ஆளுனர் ஆர். காந்தி தெரிவித்துள்ளார்.
மும்பையில் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுனர் ஆர்.காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கடந்த இரண்டு வாரத்தில், புதிய ரூபாய் நோட்டுகள் அதிகளவில் அச்சடிக்கும் வகையில், அச்சகங்கள் மாற்றியமைக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 4 லட்சம் கோடி அளவுக்கு, புதிய ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், தேவையான அளவு விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், புதிய ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் பதுக்கி வைக்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதுவரை பழைய ரூபாய் நோட்டுகள் 11 லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மீண்டும் வெளியிடுவது பற்றி முடிவு எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார். பழைய ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதால் ஏற்பட்டுள்ள நிலைமை சீரடைந்ததும், வங்கிகளில் பணம் எடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.