விவசாயம், மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் மாற்றங்கள் செய்ய 10 குழுக்கள் அமைப்பு - பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை - அடுத்த மாதம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல்
Oct 28 2016 10:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விவசாயம், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய துறைகளை பரிசீலித்து அவற்றில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பிரதமர் திரு. நரேந்திர மோடி, 10 செயலாளர்களை கொண்ட சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளார். இக்குழுக்கள், தங்களது அறிக்கையினை அடுத்த மாத இறுதிக்குள் அரசிடம் சமர்பிக்கவுள்ளன.
டெல்லியில் பிரதமர் தலைமையில் அனைத்துத் துறை செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடந்த ஜனவரி மாதம் 8 செயலாளர்களை கொண்ட குழுக்கள் அளித்த அறிக்கைகள் பற்றியும், அதன்மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் மத்திய அமைச்சரவை செயலாளர் திரு. பி.கே. சின்ஹா விவரித்தார். இதனைதொடர்ந்து, வேளாண்துறை, மின்சாரம், போக்குவரத்து போன்ற முக்கிய துறைகள் குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய 10 செயலாளர்களை கொண்ட சிறப்பு குழுக்களை அமைப்பது என இக்கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது. இந்த சிறப்புக் குழுக்கள், அடுத்த மாத இறுதிக்குள், தங்கள் அறிக்கைகளை அரசிடம் தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, அரசு செயலாளர்களின் பணியினை வெகுவாக பாராட்டினார். முக்கிய துறைகளில் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை, அரசு செயலாளர்கள், பாரபட்சமின்றி மதிப்பிட வேண்டுமென்றும் பிரதமர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். குறிப்பாக, நாட்டில் உள்ள 80 கோடி இளைஞர்களின் சக்தியை ஒன்று திரட்டுவதில் அரசு அதிகாரிகள் முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டுமென்றும் பிரதமர் வலியுறுத்தினார்.