ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதிமாறன் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் : குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது தொடர்பாக விசாரணை
Oct 26 2016 7:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதிமாறன் ஆகியோர் டெல்லி C.B.I. சிறப்பு நீதிமன்றத்தில் இன்றும் ஆஜராகினர். குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது தொடர்பாக விசாரணை நடைபெற்றது. நாளையும் விசாரணை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதிமாறன் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு கட்டாயப்படுத்தி விற்கச் செய்ததாகவும், இதற்கு கைமாறாக சன் டி.வி. குழுமத்திற்கு மேக்சிஸ் நிறுவனத்திடம் இருந்து, 743 கோடி ரூபாய் முறைகேடாகப் பெறப்பட்டதாகவும் C.B.I. மற்றும் அமலாக்கத்துறை வழக்குகள் பதிவு செய்துள்ளன. இந்த வழக்கு டெல்லி C.B.I. சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி திரு. O.P.சைனி முன்னிலையில் நடைபெற்று வரும் நிலையில், குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், அவரது சகோதரரும், சன் டி.வி. அதிபருமான கலாநிதிமாறன், கலாநிதிமாறனின் மனைவி காவேரி ஆகியோர் கூட்டாக சதி செய்து சன் டி.வி. குழுமத்திற்கு 743 கோடி ரூபாய் முறைகேடாகப் பெற்றதற்கான ஆவணங்களை எடுத்துக்காட்டி C.B.I. வழக்கறிஞர் திரு. ஆனந்த் குரோவர் ஏற்கெனவே வாதிட்டுள்ளார்.
இந்நிலையில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் வாதங்களை நிறைவு செய்ய வேண்டும் என நீதிபதி திரு. O.P.சைனி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். இந்த விசாரணை நாளையும் தொடர்ந்து நடைபெறுகிறது.