முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது இந்திய விமானப் படைக்கு 3 விமானங்களை விற்பதற்கு, 38 கோடி ரூபாய் லஞ்சம் : அமெரிக்க நீதிமன்றத்தில் பிரசில் விமான நிறுவனம் ஒப்புதல்
Oct 27 2016 11:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது இந்திய விமானப் படைக்கு 3 விமானங்களை விற்பதற்கு, 38 கோடி ரூபாய் லஞ்சம் தரப்பட்டதாக பிரசில் விமான நிறுவனம், அமெரிக்க நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.
தி.மு.க. அங்கம் வகித்த மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், பிரசில் நாட்டின் 'எம்ப்ரேயர்-145' ரக போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் 3-ம் தேதி கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் ஆயிரத்து 393 கோடியாகும். இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக எம்ப்ரேயர் நிறுவனம் இந்திய தரப்புக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்தியாவுடனான ஒப்பந்தத்தைப் பெறுவதில் ஏஜெண்ட்-T என்ற, பெயரளவுக்கு நிறுவப்படுகிற நிறுவனம் ஒன்று உதவியது தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. இந்தியாவிடமிருந்து 3 விமான கொள்முதல் ஆர்டர் பெற்றதன் மூலம் எம்ப்ரேயர் நிறுவனம் சுமார் 562 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இதன் காரணமாக தனக்கு இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த ஏஜெண்ட்-T என்ற ஷெல் நிறுவனத்திற்கு 38 கோடியே 59 லட்சம் ரூபாயை எம்ப்ரேயர் நிறுவனம் லஞ்சமாக கொடுத்துள்ளது. இதனை அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் விமான பேர ஊழல் பிரச்னையில் தீர்வு காண்பதற்காக சுமார் ஆயிரத்து 373 கோடி ரூபாயை, அமெரிக்காவுக்கு அபராதமாக செலுத்த எம்ப்ரேயர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் விமான கொள்முதலுக்கு இடைத்தரகராக செயல்பட்ட ஷெல் நிறுவனம், சிங்கப்பூரைச் சேர்ந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.