வங்கக்கடலில் உருவான "கியாண்ட்" புயல் - தமிழ்நாட்டுக்கு எந்த ஆபத்தும் இல்லை என அறிவிப்பு
Oct 25 2016 6:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை, புயலாக மாறியுள்ளது. இந்தப் புயலுக்கு "கியாண்ட்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு இந்தப் புயலால் எந்த ஆபத்தும் இல்லை.
மத்திய வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை அந்தமானில் உள்ள போர்ட்பிளேயரிலிருந்து 620 கிலோமீட்டர் வடகிழக்காகவும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து கிழக்கே 850 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. "கியாண்ட்" புயல் தொடக்கத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 72 மணி நேரத்தில் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியை நோக்கிச் செல்லும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தப் புயல் காரணமாக, ஒடிசா மற்றும் வடகடலோர ஆந்திராவில் வரும் 27-ம் தேதி முதல் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசத் தொடங்கும் என்றும், இப்பகுதிகளிலுள்ள மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு இந்தப் புயலால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் கரையைக் கடந்த பின்னர், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் அருகே புயல் உருவாகியுள்ளதையடுத்து, மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.