தீவிரவாதிகள் முகாம்கள் அழிப்பைத் தொடர்ந்து, இந்திய நகரங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும் அபாயம் - நாடுமுழுவதும் உஷார் நிலை பிரகடனம் - கடல் வழியாக தீவிரவாதிகள் நுழைய வாய்ப்பு இருப்பதால், கடலோர பாதுகாப்பும் அதிகரிப்பு
Oct 1 2016 11:32AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தலாம் என்பதால், டெல்லி மற்றும் 5 மாநிலங்களில் முழு உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தி, 7 தீவிரவாத முகாம்களை அழித்தது. இதில், 30-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் எதிர்த் தாக்குதல் நடத்தும் அபாயம் எழுந்துள்ளதால், மத்திய அரசு உஷார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகள், முக்கிய நிறுவனங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், விமான நிலையங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, தலைநகர் டெல்லி மற்றும் ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், மஹாராஷ்ட்ரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லி மீது ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதை அடுத்து, இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ள தீவிரவாதிகளை தேடிப் பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக வந்து தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாகவும், உள்துறை அமைச்சகம் கருதுவதால், கடலோரப் பாதுகாப்பும் பன்மடங்கு வலுப்படுத்தப்பட்டுள்ளது.