சார்க் கூட்டமைப்பில் உள்ள 8 நாடுகளில், 5 நாடுகள் சார்க் உச்சி மாநாட்டை புறக்கணிப்பு : வரும் நவம்பரில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த 19-வது சார்க் உச்சி மாநாட்டை பாகிஸ்தான் ஒத்திவைப்பு
Oct 1 2016 10:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் வரும் நவம்பரில் நடைபெறுவதாக இருந்த சார்க் உச்சிமாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில், இந்திய ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் அண்மையில் நடத்திய கொடூரத் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேர் உயிரிழந்தனர். இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தைதொடர்ந்து, பாகிஸ்தானை, சர்வதேச அளவில் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கையில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் முயற்சிக்கு பல்வேறு நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனிடையே, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள 19-வது சார்க் உச்சி மாநாட்டை புறக்கணிப்பதாக இந்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. சார்க் கூட்டமைப்பின் நோக்கத்திற்கு எதிராக ஒரு நாடு செயல்பட்டால், அம்மாநாட்டில் எப்படி பங்கேற்க முடியும் என இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவின் முடிவுக்கு ஆதரவாக பங்களாதேஷ், அஃப்கனிஸ்தான், பூட்டான் ஆகிய நாடுகளும் சார்க் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என அறிவித்தன.
இதனிடையே சார்க் உச்சி மாநாட்டில் பங்கேற்க போவதில்லை என இலங்கை அரசும் அறிவித்துள்ளது. சார்க் மாநாடு நடைபெறுவதற்கான சூழல் தற்போது பாகிஸ்தானில் இல்லை என இலங்கை தெரிவித்துள்ளது.
சார்க் கூட்டமைப்பில் உள்ள 8 நாடுகளில், 5 நாடுகள் சார்க் உச்சி மாநாட்டை புறக்கணித்துள்ள நிலையில், வரும் நவம்பரில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த 19-வது சார்க் உச்சி மாநாட்டை பாகிஸ்தான் ஒத்திவைத்துள்ளது. சார்க் மாநாடு நடைபெறும் தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.