உரி ராணுவ முகாம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நேற்றிரவு இந்திய பாதுகாப்புப் படையினர், பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களை குறிவைத்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில், தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் தரப்பில் ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ரன்பீர் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாமில் கடந்த 18-ம் தேதி புகுந்த பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவத்தினர் 19 பேர் வீர மரணம் அடைந்தனர். தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து, உரி தாக்குதல் ஆதாரங்களை மத்திய அரசு அதிகாரிகள் வழங்கினர்.
இந்நிலையில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில், பாகிஸ்தான் ஆதரவுடன் அமைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகளின் முகாம்களை குறிவைத்து, இந்திய பாதுகாப்புப் படையினர் நள்ளிரவு 2.30 மணியளவில் அதிரடி தாக்குதல் நடத்தினர். இத்தகவலை பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ரன்பீர் சிங் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
7 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில், ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், இந்திய ராணுவ தரப்பில் இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். கடந்த சில வாரங்களில் மட்டும் எல்லைப்பகுதியில் 20 முறை ஊடுருவல் முயற்சி நடைபெற்றதாகவும், அப்போது பிடிப்பட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரி ரன்பீர் சிங் தெரிவித்தார். மேலும், எந்த சவாலையும் சந்திக்கும் திறனோடு இந்திய ராணுவம் இருப்பதாகவும், தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், GPS உள்ளிட்ட தீவிரவாதிகள் வசமிருந்த எராளமான தொலைத்தொடர்பு கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ரன்பீர் சிங் தெரிவித்தார்.
இதனிடையே, பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, பிரதமர் திரு. நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஆகியோரிடம் எடுத்துரைத்தார். மேலும், எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பஞ்சாப், மேற்குவங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களிடம் உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், விளக்கமாக தெரிவித்துள்ளார்.