பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத் துறைக்கான அமைச்சரவைக் குழு அவசர ஆலோசனை - எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு நிலவரம் குறித்து ஆய்வு
Sep 29 2016 3:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாதுகாப்புத் துறைக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது. எல்லைப் பகுதியில் நிலவும் சூழல் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
உரி தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்த நேரத்திலும் மோதல் நேரிடலாம் என்ற நிலை காணப்படுகிறது. இதனையொட்டி, மத்திய அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருகட்டமாக, பாதுகாப்புத் துறைக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது. எல்லைப் பகுதியில் நிலவும் சூழல் குறித்து இக்கூட்டத்தில் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தை ஒட்டியுள்ள எல்லைக்கு அப்பால், 15 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் போர் கால ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பாகிஸ்தான் விமானப்படையும் பங்கேற்றுள்ளது. இந்திய எல்லையில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஒத்திகை நடைபெற்று வருகிறது. கடந்த 22-ம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த ஒத்திகை, வரும் 30-ம் தேதி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 15 ஆயிரம் ராணுவ வீரர்களும், 300 விமானப்படை வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
இதனையடுத்து, இந்திய எல்லைப்படை முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எல்லை நெடுகிலும் கூடுதலாக பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.