ஜம்மு-காஷ்மீர் மாநிலம் Uri ராணுவ முகாம் மீது நடைபெற்ற தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் : பாகிஸ்தானின் போர் சவாலை சந்திக்கத் தயார் என்றும் ஆவேசம்
Sep 25 2016 3:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் Uri ராணுவ முகாம் மீது நடைபெற்ற தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நாட்டு மக்கள் மிகுந்த கோபமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் 2 முறை ஞாயிற்றுக்கிழமைகளில் Mann Ki Baat என்ற தலைப்பில் வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி, இன்று நிகழ்த்திய உரையில், Uri ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் புகழாரம் சூட்டியதுடன், தாக்குதல் நடத்தியவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டார். இந்திய ராணுவத்தின் மீது முழு நம்பிக்கை இருப்பதாகவும், அவர்களைப் பற்றி பெருமைப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றின் மூலமே பிரச்னைகளுக்கு தீர்வுகாணமுடியும் என்றும், நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்ல முடியும் என்றும் காஷ்மீர் மக்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இதனிடையே, கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் திரு. நரேந்திரமோடி, Uri தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானே நேரடிப் பொறுப்பாகும் என்றும் இந்தத் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 18 பேர் உயிர்த் தியாகம் செய்தது வீண் போகாது என்றும் குறிப்பிட்டார். இந்தியாவுடன் ஆயிரம் ஆண்டுகள் போரிடத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் தலைவர்கள் விடுக்கும் மிரட்டலை இந்தியா சந்திக்கத் தயாராக உள்ளது என பிரதமர் திரு. நரேந்திரமோடி தெரிவித்தார்.
உலகம் முழுவதும் உள்ள மனிதநேயம் மிக்க மக்கள், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருமித்த குரலில் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் திரு நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார்.