மத்திய அரசின் அவசர அழைப்பின்பேரில் டெல்லி வந்தார் காஷ்மீர் முதலமைச்சர் மெஹபூபா முப்தி - மாநிலத்தில் இயல்பு நிலையை மீண்டும் கொண்டுவருவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கிய ஆலோசனை
Aug 27 2016 10:31AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஷ்மீரில் அப்பாவி மக்கள் உயிரிழப்பதை தடுக்க அரசுடன் பிரிவினைவாதிகள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமரை சந்தித்து பேசிய பின்னர், காஷ்மீர் முதலமைச்சர் திருமதி மெஹபூபா முப்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காஷ்மீர் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட அனைவரும் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஜம்மு-காஷ்மீரில், கடந்த ஜூலை மாதம் 8-ம் தேதி, தீவிரவாத அமைப்பின் தலைவர் பர்கான் வானி பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வன்முறை சம்பவங்கள் நீடித்து வருகின்றன. 50 நாட்களாக ஊரடங்கு உத்தரவு தொடரும் நிலையில், புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நேரிட்ட துப்பாக்கிச் சண்டையில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 67-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், காஷ்மீர் நிலவரம் குறித்து நேரில் ஆய்வு செய்ய கடந்த 2 நாட்களாக ஸ்ரீ நகரில் முகாமிட்ட மத்திய உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், வன்முறையை தூண்டி விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மெஹபூபா முப்தியிடம் கண்டிப்புடன் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து, மத்திய அரசின் அவசர அழைப்பின் பேரில், நேற்று மாலை டெல்லி வந்த திருமதி மெஹபூபா முப்தி, டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இன்று திரு.நரேந்திர மோடியை சந்தித்து, ஆலோசனை நடத்தினார்.
அப்போது, காஷ்மீர் நிலவரத்தை கையாள்வது குறித்தும், அம்மாநிலத்தில் மீண்டும் இயல்பு நிலையை ஏற்படுத்துவது குறித்தும் இருதலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, வன்முறையை தூண்டிவிடும் 400-க்கும் மேற்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்யுமாறு முதலமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டதாகவும் தெரிகிறது.
பிரதமரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமதி மெஹபூபா முப்தி, காஷ்மீரில் அப்பாவி இளைஞர்கள் கொல்லப்படுவதை தடுக்க பிரிவினைவாதிகள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். பிரதமர் திரு.நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் ஆகியோர் அமைதி முயற்சியாக பாகிஸ்தானுக்கு சென்று வந்ததை சுட்டிக்காட்டிய திருமதி மெஹபூபா, தற்போது பாகிஸ்தான் நட்புக்கரம் நீட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.