பயங்கரவாதம், ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகியவை குறித்தே பேச்சு நடத்தப்படும் - பாகிஸ்தானிடம் இந்தியா மீண்டும் திட்டவட்டம்
Aug 25 2016 1:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பிரச்னை குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தப்படும் என்று இந்தியா மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பாகிஸ்தான் விடுத்த அழைப்பிற்கு இந்தியா 2-வது முறையாக பதில் கடிதம் அனுப்பியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருதரப்பு அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர வேண்டும் என பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது. எனினும், ஜம்மு காஷ்மீரில், அண்மையில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தளபதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் வன்முறை வெடித்தது. தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் பதற்றம் நீடித்து வருகிறது.
இதனிடையே, பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் ஐஷாஸ் சவுத்ரி கடந்த வாரத்தில் காஷ்மீர் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இந்தியாவிற்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்தப் பகுதி என்றும், பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்பினரை கட்டுப்படுத்துவது மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே பேச்சு நடத்த முடியும் என்றும் இந்தியா சார்பில் உறுதிபட தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் விடுத்த அழைப்பிற்கு மத்திய வெளியுறவுத்துறைச் செயலார் திரு. எஸ். ஜெய்சங்கர் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார். இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளதாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தவிர, வேறு விஷயங்கள் குறித்து பேச்சு நடத்த முடியாது என்றும் அவர் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு ஐ.நா. சபையில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, பாகிஸ்தான் மண்ணிலிருந்து இந்திய நிலைகளை குறி வைத்து ஏவிவிடப்படும் பயங்கரவாதச் செயல்கள் குறித்து விவாதிக்க இந்தியா விரும்புவதாக ஏற்கெனவெ தெரிவிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியிருந்தார். அதனைத்தொடர்ந்து இருநாடுகளுக்கிடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதில் இழுபறி நீடித்து வருகிறது. தற்போது இந்திய வெளியுறவுத்துறை மூலமாகவும், மத்திய அரசின் நிலைப்பாடு உறுதிபடத் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.