பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் பங்கேற்ற நிகழ்ச்சியில் அணிந்த உடை ஏலம் - 4 கோடியே 31 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதால், உலக சாதனையாக கின்னஸ் அமைப்பு அங்கீகாரம்
Sep 2 2016 11:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியா வந்தபோது, பிரதமர் திரு. நரேந்திர மோடி அணிந்திருந்த உடை, 4 கோடியே 31 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதை, உலக சாதனையாக கின்னஸ் அமைப்பு அங்கீகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்திருந்தார். ஒபாமாவுடன் நடைபெற்ற சந்திப்பின்போது, பிரதமர் திரு. நரேந்திர மோடி, நரேந்திர தாமோதர் தாஸ் மோடி என அச்சிடப்பட்டிருந்த உயர் ரக சூட் மற்றும் கோட் அணிந்திருந்தார். அதன் விலை 10 லட்சம் ரூபாய் என்று தகவல் வெளியானது. அப்போதே இத்தகவல் சமூக வலை தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டதுடன், பொதுமக்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், உடைக்காக இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட வேண்டுமா என நாடு முழுவதும் பெரும் சர்ச்சையும் எழுந்தது. ஆனால், பிரதமர் அணிந்திருந்த உடை ஏலம் விடப்பட்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நடைபெற்ற ஏலத்தில், 4 கோடியே 31 லட்சம் ரூபாய்க்கு அந்த உடை விற்பனையானது. இந்நிலையில், பிரதமர் திரு. நரேந்திர மோடி அணிந்திருந்த உடை, 4 கோடியே 31 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதை, உலக சாதனையாக கின்னஸ் அமைப்பு தற்போது அங்கீகரித்துள்ளது.