சீனாவில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திரமோடி -அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் சீன அதிபர் Xi Jinping-குடன் முக்கிய பேச்சுவார்த்தை
Jul 30 2016 2:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் திரு.நரேந்திரமோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் சீன அதிபர் Xi Jinping ஆகியோரை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ஜி-20 உச்சிமாநாடு சீனாவின் Hangzhou நகரில் செப்டம்பர் 4, 5 ஆகிய இரு தினங்களில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் திரு.நரேந்திரமோடி பங்கேற்கிறார். உச்சிமாநாட்டின் நடுவே, ஓய்வு நேரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளின்போது, அமெரிக்க அதிபர் ஒபாமாவை திரு.மோடி சந்தித்துப் பேசுகிறார். அப்போது பாதுகாப்புத்துறை தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து முக்கிய விவாதம் நடைபெறவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், பயங்கரவாதத் தடுப்பு, என்.எஸ்.ஜி. எனப்படும் அணுசக்தி நாடுகள் குழுமத்தில் இந்தியா இடம்பெறுதல் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீன அதிபர் Xi Jinping-குடன் திரு.மோடி நடத்தவுள்ள பேச்சுவார்த்தையில், தென்சீன கடல் பிரச்னை முக்கிய இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியா என்.எஸ்.ஜி. அமைப்பில் சேரவேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் திரு.மோடி, சீன அதிபரிடம் எடுத்துக்கூறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவை என்.எஸ்.ஜி.யில் அனுமதிக்கக்கூடாது என சீனா தொடர்ந்து எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.