கர்நாடக மாநிலத்தில் ஒரு பெண்ணுக்கு 6 கிலோ 800 கிராம் எடையுடன் குழந்தை
Sep 2 2016 1:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கர்நாடக மாநிலத்தில் ஒரு பெண்ணுக்கு 6 கிலோ 800 கிராம் எடையுடன் குழந்தை பிறந்துள்ளது. இந்தியாவிலேயே இதுதான் அதிக எடையுடன் பிறந்த குழந்தை என்று கருதப்படுகிறது.
கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில், நந்தினி என்ற 19 வயது பெண் மகப்பேற்றிற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. அதன் எடை 6 கிலோ மற்றும் 800 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குழந்தைக்கு முழு அளவில் உணவு கொடுத்து வருவதாகவும், தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் ஹாசன் மாவட்ட மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அளவுக்கு அதிக எடையுடன் குழந்தை பிறப்பதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலேயே இதுதான் அதிக எடையுடன் பிறந்த குழந்தை என்று கருதப்படுகிறது. இதற்குமுன், கடந்த ஆண்டு, 6 கிலோ 7 கிராம் எடையுடன் பிறந்த குழந்தைதான், இந்தியாவின் அதிக எடையுள்ள குழந்தையாக இருந்தது.
எனினும் இத்தாலியில் கடந்த 1955-ம் ஆண்டு, 10 கிலோ 200 கிராம் எடையுடன் பிறந்த குழந்தைதான், உலகிலேயே அதிக எடையுடன் உயிரோடு பிறந்த குழந்தை என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.