சீன அதிபர் மற்றும் பிரதமருடன் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி முக்கிய ஆலோசனை : எல்லைப் பிரச்னை, தீவிரவாதம் உள்ளிட்ட விவகாரங்கள் ஆலோசனை
May 27 2016 8:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீன அதிபர் மற்றும் பிரதமருடன் இந்திய குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின்போது எல்லைப் பிரச்னை, தீவிரவாதம் உள்ளிட்ட விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். பல்கலைக் கழக நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், சீனா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி என்றும், இருநாட்டு சிந்தனைகளும் சர்வதேச அளவில் ஒருமித்து இருப்பதாகவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து சீன அதிபர் Xi Jinping, பிரதமர் Li Keqiang உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, எல்லைப் பிரச்னை, தீவிரவாதம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச அளவில் பல்வேறு பிரச்னைகளில் இந்தியாவும், சீனாவும் இணைந்து செயல்பட ஒப்புக்கொள்ளப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் திரு. ஜெய்சங்கர் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே, இந்திய எல்லைப்பாதுகாப்புப் படை அதிகாரிகளும், பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளும் வரும் ஜூலை மாதம் லாகூரில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே, பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை இந்திய தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பாகிஸ்தான் சென்று விசாரிப்பதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.