உத்தரகண்ட் காட்டுத் தீ சம்பவத்திற்கு சதிச்செயல் காரணமா? - மரக் கடத்தல் மற்றும் நில தரகர்கள் கூட்டு சேர்ந்து தீ வைத்ததாக வலுத்துவரும் சந்தேகம்
May 2 2016 7:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரகண்ட் மாநிலத்தில் இடைவிடாமல் எரிந்துகொண்டிருக்கும் காட்டுத் தீ சம்பவத்திற்கு, அங்குள்ள மரம் வெட்டும் கும்பல் மற்றும் நில விற்பனையாளர்கள் மேற்கொண்ட சதிச்செயலே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
உத்தரகண்ட் மாநிலத்தின் பூரிகர்வால் மாவட்டத்தில் உள்ள யாம்கேஷ்வர் வனப்பகுதியில் கடந்த பல வாரங்களாக காட்டுத் தீ தொடர்ந்து பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இதனை அணைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வரும்போதிலும், தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதமான தட்பவெப்ப நிலைகொண்ட அப்பகுதியில், இதுபோன்ற தீவிபத்து இதற்கு முன் நேர்ந்ததில்லை என்பதால், இதன் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டம் இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் இதுபற்றிய கருத்துக்கள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. அங்கு மரங்களை வெட்டி கடத்தும் கும்பலும், நில விற்பனையாளர்களும் சேர்ந்து காட்டுத்தீயை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. வனத்துறை அதிகாரிகள் சிலருடன் அவர்கள் கைகோர்த்து இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் பரவலான பேச்சு எழுந்துள்ளது. இதன் மூலம், வனப்பகுதியில் எஞ்சி நிற்கும் மரங்களை ஏலம் விட்டு வருவாய் பெருக்க வனத்துறைக்கு வாய்ப்பு கிடைப்பதோடு, குறுக்கு வழியில் அம்மரங்களை வாங்குவதற்கு மரம் கடத்தும் கும்பலுக்கும் வாய்ப்பு ஏற்படும்- இந்த அடிப்படையில்தான் இந்த சம்பவம் நேரிட்டிருப்பதாக தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் வனப்பகுதி எரிந்து சாம்பலானதும் வெட்டவெளியாக தெரியும் நிலத்தை, ரியல் எஸ்டேட் தொழிலுக்கு பயன்படுத்தவும் வழி ஏற்படும் என்பதால், இதுபோன்ற தொழிலில் ஈடுபடும் சிலர் ஒன்று சேர்ந்து திட்டமிட்டே இந்த சம்பவத்தை அரங்கேற்றியிருப்பதாகவும் சந்தேகம் வலுத்துள்ளது.