ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் கடும் துப்பாக்கிச் சண்டை - லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை
Feb 5 2016 8:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
நாட்டில் பல்வேறு நாசச் செயல்களை அரங்கேற்றும் நோக்கில் ஜம்மு-காஷ்மீரில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில், அம்மாநில போலீசாருடன் பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், Bandipora மாவட்டம், ஹாஜின் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 3 மாடிகளைக் கொண்ட வீட்டில் மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே நீண்டநேரம் நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில், 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து மூன்று ஏ.கே-47 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சுட்டுக்கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.