சகோதர பாசத்தை உணர்த்தும் ரக்ஷா பந்தன், நாடு முழுவதும் உற்சாகக் கொண்டாட்டம் : ராக்கி கயிறைக் கட்டி அன்புப் பரிமாற்றம்
Aug 29 2015 9:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சகோதர பாசத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் விழா, நாடு முழுவதும் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சகோதரிகள், தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறைக் கட்டி, தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
ரக்ஷா பந்தன் விழா அன்று பெண்கள், தங்கள் சகோதரர்கள் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக, அவர்கள் கரங்களில் ராக்கி கயிறு கட்டுவது வழக்கம். இக்கயிறை அணிந்துகொள்வதன் மூலம், அவர்கள் தங்கள் சகோதரிகளுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், இந்த விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் ரக்ஷா பந்தன் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சந்தைகளில் ராக்கி கயிறுகள் விற்பனை களைகட்டியுள்ளது. இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
தமிழகத்திலும் ரக்ஷா பந்தன் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் சின்னசெட்டி தெரு, செளராஷ்டிரா தெரு, வளையல்காரத் தெரு உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் பெண்கள், தங்கள் சதோதரர்களுக்கும், சகோதரர்களாக பாவிப்பவர்களுக்கும் ராக்கி கயிறைக் கட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். ராக்கி கயிறை அணிந்து கொண்ட சகோதரர்கள், தங்களது சகோதரிகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்ந்தனர்.