ஜம்மு-காஷ்மீரில், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பிற்கு அடித்தளம் அமைக்கும் நோக்கத்துடனேயே பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகளை அனுப்பியது அம்பலம் : இந்திய ராணுவத்திடம் பிடிபட்ட தீவிரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம்
Aug 29 2015 9:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு-காஷ்மீரில், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பிற்கு அடித்தளம் அமைக்கும் நோக்கத்துடன் தங்களை பாகிஸ்தான் ராணுவம் அனுப்பியதாக இந்திய ராணுவத்திடம் பிடிபட்ட தீவிரவாதிகள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனையடுத்து எல்லைக்கோட்டுப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியா-பாகிஸ்தான் இடையே 1965-ம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா மகத்தான வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் 50-வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்நாளில் இந்தியாவில் நாச வேலைகளில் ஈடுபடும் நோக்கில், நேற்று முன்தினம் வடகாஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அப்போது, எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இருவர் உயிரோடு பிடிபட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஸ்ரீநகரை அடுத்து 76 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அமைந்துள்ள Rafiabad பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பிற்கு அடித்தளம் அமைக்கும் பணிக்காக தங்களை பாகிஸ்தான் ராணுவம் அனுப்பியதாக தெரிவித்தனர். மேலும், பாகிஸ்தான் ராணுவ தளத்தில் தங்களுக்கு, ஆயுதங்கள் பற்றிய அடிப்படைப் பாடம் 21 நாட்கள் வழங்கப்பட்டன என்றும், அதனைத்தொடர்ந்து 2 மாதங்கள் ஏ.கே.47 உட்பட துப்பாக்கி சுடும் பயிற்சிகள் தரப்பட்டன என்றும், மூன்றாவதாக வெடிபொருட்களை கையாள்வது மற்றும் புதைத்து வைப்பது ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டன என்றும் தீவிரவாதிகள் வாக்குமூலம் அளித்தனர். இதுகுறித்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் அப்துல் பாஷித்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
இதனிடையே, ஸ்ரீநகரிலும், அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் பல கட்டடங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகளின் கொடிகள் மீண்டும் பறக்கவிடப்பட்டுள்ளன. கொடிகளை ஏந்திக்கொண்டு சில வீட்டு மாடிகளில் ஏறிய முகத்திரை அணிந்த இளைஞர்கள், இந்தியாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சியினரும், பாதுகாப்பு ஆலோசகர்களும் வலியுறுத்தியுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற அனுமதிக்கக் கூடாது என ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.