இந்தியா - பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையே அடுத்த மாதம் முக்கிய பேச்சுவார்த்தை - இருநாட்டுப் பிரதமர்களிடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி நடவடிக்கை
Jul 31 2015 6:11AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஏற்கெனவே திட்டமிட்டபடி, இந்தியா - பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டத்தை, வரும் 23, 24 தேதிகளில் நடத்துவது என இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் திரு. நரேந்திர மோதி, அண்மையில் ரஷ்யா சென்றபோது, அங்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பை, கடந்த 10-ம் தேதி சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாடுகளிடையே, தடைப்பட்ட பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் பஞ்சாப் எல்லையைக் கடந்து, இந்தியாவுக்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள், குர்தாஸ்பூர் மாவட்டத்தில், காவல்நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் தாக்குதல் நடத்தினர். இதில், போலீஸ் அதிகாரி உட்பட 4 போலீசாரும், பொதுமக்களில் 3 பேரும் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. எனினும், திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23, 24 ஆகிய தேதிகளில் இரு நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையே பேச்சுவார்த்தையை நடத்துவது என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. அஜித் தோவல், பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸை சந்தித்துப் பேசவிருக்கிறார். அதேசமயம், பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கவும் இந்தியா தயாராக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.