ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளில் தலையிடுவது இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்தும் - பொருளாதார நிபுணர்கள் கருத்து
Jul 31 2015 6:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளில் தலையிடுவது இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு தற்போது முடிவு செய்கிறது. அந்தக் குழு எடுத்த முடிவின்படி அல்லது தனக்கு மட்டுமே உள்ள வீட்டோ எனப்படும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நிதி கொள்கையை ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பார். இந்நிலையில், இந்திய நிதித்துறை நெறிமுறையில் திருத்தம் செய்வதற்கான புதிய வரைவு திட்டத்தை மத்திய நிதியமைச்சகம் அண்மையில் வெளியிட்டது. இந்த வரைவு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநரின் சிறப்பு அதிகாரத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, நிதி கொள்கையை முடிவு செய்யும் குழுவில், ரிசர்வ் வங்கி சார்பில் 3 பேரும், மத்திய அரசு சார்பில் 4 பேரும் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட தரப்பினர் என்ற அடிப்படையில், நிதி கொள்கை முடிவுகளில் மத்திய அரசின் கை மேலோங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும், ரிசர்வ் வங்கிக்கு தலைமை விகிப்பவர் ஆளுநர் என்றே இதுவரை அழைக்கப்படுகிறார். இந்நிலையில், ஆளுநருக்குரிய அதிகாரங்களை குறைத்து, ரிசர்வ் வங்கி தலைவர் என்ற வரையறைக்குள் சுருக்க, மத்திய அரசின் புதிய வரைவு திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வரைவு திட்டத்தின் மூலம் ரிசர்வ் வங்கியின் அதிகாரம் பெருமளவு குறைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசின் புதிய வரைவு திட்டம், ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மையை குறைத்து, அதன் திறமையை முடக்கும் என Moody's Analytics என்ற பொருளாதார ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் தனித்துவத்தை முடக்குவதால், பணவீக்க நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதோடு, இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்தும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முக்கிய நிதிசார் முடிவுகளில் மத்திய அரசு தீர்மானிப்பது ரிசர்வ் வங்கியின் நற்பணிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் என்றும், இது அபாயகரமானது என்றும் பொருளாதார ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.