அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் இந்தியா மீது மிகப்பெரும் தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு திட்டம் : அமெரிக்க பத்திரிகை திடுக்கிடும் தகவல்
Jul 30 2015 9:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் இந்தியா மீது மிகப்பெரும் தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு திட்டமிட்டிருப்பதாக, அமெரிக்க பத்திரிகை ஒன்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் இஸ்லாமிய அரசை நிறுவும் நோக்கத்தில், செயல்பட்டு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு, சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு ஏராளமானோரை கொன்று குவித்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தனது செயல்களை அரங்கேற்றி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து வெளியாகும் USA Today பத்திரிகையில் புலனாய்வு கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அக்கட்டுரையுடன் பாகிஸ்தானின் தாலிபான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரிடம் இருந்து பெறப்பட்ட உறுதிமொழி ஆவணமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா மீது மிகப்பெரும் தாக்குதல் நடத்த ஐ.எஸ். அமைப்பு திட்டமிட்டிருப்பதாக அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் இறுதிகட்ட போருக்கு இந்த தாக்குதல் வழிவகுக்கும் என அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.எஸ். அமைப்புடன் அல்-கைதா தீவிரவாத அமைப்பு இணைய வேண்டும் என்றும், ஐ.எஸ். அமைப்பின் தலைவரை உலகில் உள்ள 100 கோடி இஸ்லாமியர்களும் தனது ஒரே தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அந்த ஆவணத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாமீது தாக்குதல் நடத்துவதன் மூலம், ஐ.எஸ். அமைப்பின் செல்வாக்கு அதிகரிக்கும் என்றும், தெற்காசிய பிராந்தியத்தில் இருக்கும் பயங்கரவாதிகள், இந்தியா மீதான தாக்குதலை புனித கடமையாக கருதுவதாகவும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தை அமெரிக்க புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த 3 அதிகாரிகள் உறுதிபடுத்தியிருப்பதாகவும் USA Today பத்திரிகையில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.