இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் மாரடைப்பால் காலமானதையடுத்து, நாடு முழுவதும் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அவரின் உடல் மேகாலய மாநிலம் ஷில்லாங்கில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 2007 ஆண்டுவரை பதவி வகித்த டாக்டர் அப்துல் கலாம், இந்திய மாணவ-மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்த, வேலைவாய்ப்பை உருவாக்கவும் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டவர்.
1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் நாள் ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம், பட்டப்படிப்பை திருச்சியில் பயின்றார். பின்னர் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் பதவி வகித்த அவர், இஸ்ரோவில் பொறியியல் விஞ்ஞானியாகவும் பணியாற்றினார்.
குடியரசு தலைவரின் பதவிக்காலம் நிறைவுற்றதையடுத்து, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சந்தித்து, எழுச்சிமிகு உரையாற்றி வந்தார்.
அதன் தொடர்ச்சியாக மேகாலய மாநிலம் ஷில்லாங்கில் நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்களிடையே உரையாற்றிபோது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், துரதிர்ஷ்டவசமாக அப்துல்கலாமின் உயிர் பிரிந்தது. அவரின் மறைவு நாடு முழுவதும் மீளமுடியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாடு முழுவதும் 7 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே, ஷில்லாங் விமான நிலையத்தில் இருந்து அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் சிறப்பு ராணுவ ஹெலிகாப்டரில் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக அப்துல்கலாமின் உடலுக்கு மேகாலய முதலமைச்சர், ஆளுனர் உள்ளிட்ட தலைவர்கள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அரசு துக்கம்
பாரத ரத்னா டாக்டர் A.P.J. அப்துல்கலாம் மறைவையொட்டி, வரும் ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி வரை ஒருவார காலம், நாடு முழுவதும் அரசு முறைத் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று இரவு 7.45 மணியளவில் ஷில்லாங்கில் மரணமடைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.A.P.J. அப்துல்கலாம் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளதோடு, அவரது மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒருவார காலம், நாடு முழுவதும் துக்கம் கடைப்பிடிக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த ஒருவார காலமும், தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் - அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது என்று தலைமைச் செயலாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.