பி.எஸ்.என்.எல். அதிவேக இணைப்புகளை சட்டவிரோதமாக சன் டி.வி.க்கு பயன்படுத்திய வழக்கு - தயாநிதிமாறனை தொடர்ந்து கலாநிதி மாறனிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு - விரைவில் சம்மன் அனுப்பப்படும் எனவும் தகவல்
Jul 4 2015 6:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
BSNL நிறுவனத்தின் இணைய வசதியுடன் கூடிய 300-க்கும் மேற்பட்ட அதிநவீன I.S.D.N. இணைப்புகளை சன் டி.வி. பயன்பாட்டுக்கு சட்டவிரோதமாக அளித்து, மத்திய அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய வழக்கில், கருணாநிதி பேரன் கலாநிதி மாறனிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் உள்ள தயாநிதி மாறனின் ஆடம்பர வீட்டில், Internet வசதியுடன் கூடிய 323 அதிநவீன I.S.D.N. இணைப்புகள் உட்பட 780 இணைப்புகளைக் கொண்ட, தொலைபேசி இணைப்பகம் ஒன்றை சட்டவிரோதமாக உருவாக்கியிருந்தார். அங்கிருந்து, தனது சகோதரர் கலாநிதிமாறனின் சன் டி.வி.க்கு இந்த அதிநவீன இணைப்புகளை ரகசியக் கேபிள்கள் மூலம் முறைகேடாக திருப்பிவிட்டு, மிகப்பெரும் மோசடியில் ஈடுபட்டார்.
இந்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்பாக, விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ., தகுந்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் மாறன் சகோதரர்கள் மீது முதல்தகவல் அறிக்கையை பதிவு செய்தது. இந்நிலையில், தயாநிதிமாறன் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகவேண்டும் என சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. இந்த விசாரணையின்போது, சி.பி.ஐ. அதிகாரிகள் தன்னை கைதுசெய்யக் கூடும் என்ற அச்சத்தில், தயாநிதிமாறன் சென்னையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்து, உயர்நீதிமன்றத்தில், நிபந்தனையுடன் கூடிய இடைக்கால முன்ஜாமீன் பெற்றார்.
அதன்பின்னர், டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக தயாநிதிமாறன் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பல மணி நேரம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். 3-வது நாளாக, தயாநிதிமாறனிடம் டெல்லியில் விசாரணை நடைபெற்றது. சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்ட பல கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக, முரண்பட்ட தகவல்களை தயாநிதிமாறன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் சன் குழும தலைவர் கலாநிதி மாறனிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு கலாநிதி மாறனுக்கு விரைவில் சி.பி.ஐ., சம்மன் அனுப்பவுள்ளதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.