முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சிக்கு தடை விதிக்கக்கோரி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், கேரளா மற்றும் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைப்பெரியாறு பகுதியில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் அங்கு நிச்சயம் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை ரோந்துப் பணி அவசியம் தேவை என்பதை வலியுறுத்தி, தமிழக அரசு, கூடுதல் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில், புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சி மேற்கொண்டு வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழக அரசு சார்பில், கடந்த மே மாதம் 7-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. புதிய அணை கட்டுவதற்காக, கேரள அரசு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இது, உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும், மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பிரச்னை தொடர்பாக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதேபோன்று, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19-ம் தேதியன்று, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், முல்லைப்பெரியாறு அணைக்கு கேரள அரசு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்றும், அணையை பராமரிக்க செல்லும் தமிழக பொதுப்பணி அதிகாரிகள் தாக்கப்படுவதாலும், இதனால் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அணை பாதுகாக்க மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரை அங்கு நிறுத்த வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இதுமட்டுமின்றி, கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனுவில், முல்லைப் பெரியாறு பகுதிக்கு செல்வதற்கு கேரள அதிகாரிகள் இடையூறு செய்து வருவதால், அணை பராமரிப்புக்காக உபகரணங்கள் மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்றும், குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, தமிழக அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், கோரிக்கை எழுப்பப்பட்டிருந்தது.
இந்த 3 வழக்குகளும், உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன. தமிழக அரசின் சார்பில், வாதிட்ட வழக்கறிஞர் திரு. ராகேஷ் துவிவேதி, உச்சநீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், முல்லைப்பெரியாறு அணைப் பகுதியை பாதுகாக்க மத்திய தொழிலக பாதுகாப்புப் படையை நிறுத்துதல் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கு செல்லும் தமிழக அதிகாரிகளுக்கு இடையூறு செய்யும் விவகாரம் ஆகியவற்றில் தமிழகத்தின் சார்பில் பதில் அளிக்க 2 வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.
இதனை ஏற்றுக் கொண்டு, அவகாசம் வழங்கிய தலைமை நீதிபதி திரு. எச். எல். தத்து தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, புதிய அணை கட்டும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கும், கேரள அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். அடுத்தக்கட்ட விசாரணையை, ஆகஸ்ட் மாதத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதனிடையே முல்லைப்பெரியாறு பகுதியில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் அங்கு நிச்சயம் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை ரோந்துப் பணி அவசியம் தேவை என்பதை வலியுறுத்தி தமிழக அரசு கூடுதல் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.