சர்வதேச யோகா தினம், உலகம் முழுவதும் கடைபிடிப்பு : டெல்லியில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் யோகா பயிற்சியில் பங்கேற்று கின்னஸ் சாதனை - ஒரே நாளில் அதிக நாடுகளில் யோகாசன நிகழ்ச்சிகள் நடைபெற்றதும் சாதனையாக அறிவிப்பு
Jun 22 2015 10:15AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சர்வதேச யோகா தினத்தை யொட்டி, டெல்லியில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற யோகாசன நிகழ்ச்சி, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது. ஒரே நாளில் உலகம் முழுவதும் அதிக நாடுகளில் யோகாசன நிகழ்ச்சிகள் நடைபெற்றதும் சாதனையாக அமைந்தது.
உடலுக்கு வலுவையும், மனதிற்கு புத்துணர்ச்சியையும் தரும் யோகக் கலையை, சர்வதேச தினமாக கடைப்பிடிக்குமாறு ஐ.நா. சபை அறிவித்தது. இதனையடுத்து, அமெரிக்கா, ஃபிரான்ஸ் உட்பட உலகம் முழுவதும் சுமார் 170 நாடுகளில் சர்வதேச யோகா தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. டெல்லியில் ராஜ்பாத்தில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சியில் 35 ஆயிரத்து 985 பேர் பங்கேற்றனர். ஒரே இடத்தில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு யோகாசனம் செய்தது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இதேபோல், ஒரே நாளில் உலகம் முழுவதும் அதிக நாடுகளில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றதும் கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரில் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூன், யோகாசனம் உலகம் முழுவதும் மக்கள் அறிந்த சிறந்த பயிற்சியாக உள்ளது என்றும், அனைத்து தரப்பு மக்களும் அவர்களின் பலம், வயது மற்றும் திறமைக்கு ஏற்றவகையில் கடைபிடிக்கக்கூடியது யோக பயிற்சி என்றும் பாராட்டு தெரிவித்தார்.