ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.15 விழுக்காடாக நிர்ணயம் : மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக பரிந்துரையை அனுப்பி வைத்தது தொழிலாளர் நலத்துறை
Mar 28 2023 6:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான 2022-23ம் நிதியாண்டின் வட்டி விகிதத்தை 8.15 சதவீதமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வாரியத்தின் கூட்டம், மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. 2022-23ம் நிதியாண்டில், தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கான வருடாந்திர வட்டி விகிதத்தை 8.15 சதவீதமாக வழங்க இக்கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்றபின்னர், இந்த வட்டி விகிதம் மத்திய அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். இதனைத் தொடர்ந்து தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதிக் கணக்குகளில் இந்த வட்டித் தொகை வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதிக் கணக்கில் உள்ள சுமார் 11 லட்சம் கோடி அசல் தொகைக்கு, 90 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வட்டித் தொகை வழங்கப்படும். கடந்த 2021-22ம் நிதியாண்டில், அப்போதைய கணக்குப்படி, 9 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாய் அசல் இருந்ததும், அதற்கு 77 ஆயிரத்து 424 கோடி ரூபாய் வட்டித் தொகை வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 2022-23ம் நிதியாண்டில் வழங்கப்படும் 90 ஆயிரம் கோடி ரூபாய் வட்டித் தொகைதான் இதுவரை வழங்கப்பட்டதில் அதிகமானது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.