விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி54 ராக்கெட் : 9 செயற்கைக்கோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது
Nov 26 2022 3:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து PSLV C-54 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அதில் அனுப்பப்பட்ட 9 செயற்கைக்கோள்களும், புவி சுற்றுவட்ட பாதையில் திட்டமிட்டப்படி நிலை நிறுத்தப்பட்டன.
PSLV C-54 ராக்கெட்டுக்கான 25.30 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று காலை தொடங்கிய நிலையில், இன்று காலை 11.56 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களுடன் PSLV C-54 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோ வடிவமைத்த புவி கண்காணிப்புக்கான EOS-6 நவீன செயற்கைக்கோள் அதில் பிரதானமாக இடம்பெற்றுள்ளது. ஆயிரத்து 117 கிலோ எடை கொண்ட EOS-6 செயற்கைக்கோள், ஓசோன்சாட் வரிசையில் அனுப்பப்படும் 4-வது ஆய்வு கலமாகும்.
கடலின் தன்மை, அதன் மேற்பரப்பு, வெப்பநிலை, காற்றின் திசை மாறுபாடுகள், வளிமண்டலத்தின் நிகழும் ஒளியியல் மாற்றங்கள் போன்றவற்றை தொடர்ந்து கண்காணித்து தகவல்களை அளிக்க EOS-6 செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது. இதைத் தவிர, அமெரிக்காவின் 4 செயற்கைக்கோள்களும், இந்தியா - பூடான் கூட்டு தயாரிப்பான 2 செயற்கைக்கோள்களும் PSLV C-54 ராக்கெட்டில் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில், ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட 9 செயற்கைக்கோள்களும் புவி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.