ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் நீடிப்பரா? : தொடர் சிக்கல் நிலவுவதால் காங்கிரசில் குழப்பம்
Oct 6 2022 4:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் நீடிப்பரா? என்பதில் தொடர் சிக்கல் நிலவுவதால் மாநில காங்கிரஸ் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், காங்கிரசில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சித்தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட திரு.ராகுல் காந்தி மறுத்துள்ளதால், ராஜஸ்தான் முதலமைச்சர் திரு.அசோக் கெலாட்டை திருமதி.சோனியாகாந்தி தேர்வு செய்தார். எனினும், முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க மனமில்லாத கெலாட், தலைவர் பதவி போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
அசோக் கெலாட் தலைவரானால், ராஜஸ்தான் முதலமைச்சர் பதவி மூத்த தலைவர் சச்சின் பைலட்டுக்கு கிடைக்க அதிகமாக வாய்ப்பு, இருந்தது. ஆனால் போட்டியிலிருந்து கெலாட் விலகியதால் முதலமைச்சர் பதவிக்கான வாய்ப்பு பறிபோன சூழலில், 90 எம்.எல்.ஏ.க்கள் தன்பக்கம் உள்ளதாக சச்சின் பைலட் கூறியதால், கட்சிக்குள் குழப்பம் நிலவியது. இந்தச் சூழலில் முதலமைச்சர் பதவி யாருக்கு? என்பதே கேள்வியாக உள்ளது. ராஜஸ்தான் முதலமைச்சர் யார் என்பதை இரு தினங்களில் சோனியா காந்தி அறிவிப்பார் என கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் தெரிவித்து, ஒரு வாரம் கடந்த நிலையில், இன்னும் யார் முதலமைச்சர் என அறிவிக்காதது ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.