இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 105 படகுகள் - ஏலம் விட இலங்கை அரசு நடவடிக்கை
Jan 23 2022 11:33AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 105 படகுகளை ஏலம் விட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக கடற்கரை மாவட்டங்களான நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை, இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 125 மீன்பிடி படகுகள் மற்றும் 17 நாட்டுப் படகுகள் கடற்படை முகாம்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இப்படகுகள் 5 ஆண்டுகளாக முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதால், உள்ளூர் மீனவர்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், இதனால் படகுகளை ஏலம் விடப்போவதாகவும் இலங்கை அரசு கடந்த 2020-ம் ஆண்டு அறிவித்தது. இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இலங்கை அரசிடமிருந்த தமிழக மீன்பிடி படகுகளை வரும் பிப்ரவரி மாதம் 7-ம் தேதி முதல் ஏலம் விடப்படும் என்றும், 10-ம் தேதி வரை ஏலம் நடைபெறும் என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கை அரசின் இந்த அறிவிப்பு படகுகளை பறிகொடுத்த மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.