உ.பி சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு 40%இட ஒதுக்கீடு : காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேட்டி
Oct 19 2021 3:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் இடங்களில், 40 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருமதி.பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், உத்தரபிரதேச தேர்தல் பொறுப்பாளருமான திருமதி.பிரியங்கா காந்தி, கடந்த சில மாதங்களாக, உத்தரபிரதேசத்தில் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், லக்னோவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திருமதி.பிரியங்கா காந்தி, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் போட்டியிடும் மொத்த இடங்களில், 40 சதவீத இடங்கள் பெண்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தார். பெண்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்றும், பெண்கள் அரசியலில் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார். மாற்றத்தைக் கொண்டு வர நினைக்கும் பெண்களுக்காகவே இந்த இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது உத்தரபிரதேசத்தில் பரவியுள்ள வெறுப்பு அரசியலை பெண் தலைவர்களால் மட்டுமே முடிவுக்கு கொண்டுவர முடியும் என்றும் திருமதி.பிரியங்கா காந்தி தெரிவித்தார்.