உத்தரகாண்டின் நைனிடாலில் மேகவெடிப்பால் பெய்த மிக கனமழை - வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கிய 100-க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்க தீவிர நடவடிக்கை
Oct 19 2021 1:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரகாண்டின் நைனிடால் மாவட்டத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 100-க்கும் அதிகமான மக்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால், பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் 7 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பத்ரிநாத்துக்கு பயணம் மேற்கொண்டோர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். பத்ரிநாத்திலிருந்து திரும்பிய 2 ஆயிரத்து 500 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், நடுவழியில் சிக்கிக் கொண்டவர்களை எல்லை சாலைகள் அமைப்பினர் மீட்டு வருகின்றனர். இதனிடையே சிம்கல் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், கட்டுமானப் பணிக்காக கூடாரம் அமைத்து தங்கியிருந்த நேபாளத்தை சேர்ந்த இரு தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பலியாகினர்.
இந்நிலையில், நைனிடால் மாவட்டத்தில் உள்ள ராம்கார்க் கிராமத்தில் இன்று காலை மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 100-க்கும் அதிகமானோர் சிக்கியுள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்க, சம்பவ இடத்திற்கு போலீசார், மாவட்ட நிர்வாகம் மற்றும் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.
உத்தரகாண்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடரும் வேளையில், பத்ரிநாத்தில் பனிப்பொழிவும் அதிகரித்துள்ளதால் நந்தகினி ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, உத்தரகாண்டில், அடுத்த சில நாட்களுக்கு மிக கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.