இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரமாக குறைந்தது - மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்திற்கு கீழ் சரிவு
Oct 19 2021 12:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 2 லட்சத்திற்கு கீழ் சரிந்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்து 58 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 94 ஆயிரத்து 373-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 164 பேர் தொற்றுக்கு மரணமடைந்துள்ளதாகவும், இதன்மூலம் கொரோனா மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 52 ஆயிரத்து 454-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 118 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 3 கோடியே 34 லட்சத்து 58 ஆயிரத்து 801 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 470 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 98 கோடியே 67 லட்சத்து 69 ஆயிரத்து 411 டோஸ், கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.