சலுகைகள் வழங்காததால் பல தொழிற்சாலைகள் வெளியேறியது : மத்திய அரசு மீது புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
Sep 22 2021 11:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசு சலுகைகள் கொடுக்காததால் புதுச்சேரியை விட்டு பல்வேறு தொழிற்சாலைகள் வெளியேறிவிட்டதாக அம்மாநில முதலமைச்சர் திரு. என்.ரங்கசாமி விமர்சித்திருப்பது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் 75-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி, புதுச்சேரி மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் வாணிஜ்ய உத்சவ் என்ற பெயரில் ஏற்றுமதியாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அம்மாநில துணைநிலை ஆளுநர் திரு.தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் முதலமைச்சர் திரு. என்.ரங்கசாமி கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய திரு. என்.ரங்கசாமி, புதுச்சேரியில் அரசு எடுத்து வரும் நடவடிக்கையின் காரணமாக கொரோனா தொற்று குறைந்து, தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். இருந்த போதிலும் கடந்த காலங்களில் மத்திய அரசு சில சலுகைகளை கொடுக்காததால், புதுச்சேரியை விட்டு பல்வேறு தொழிற்சாலைகள் வெளியேறியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இனி வருங்காலங்களில் தொழிற்சாலைகள் அமைய எளிய முறையை அதிகாரிகள் கையாள வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கும் சூழலில், முதலமைச்சர் திரு. என். ரங்கசாமியின் பேச்சு கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.