செல்ஃபோன் ஒட்டுக்கேட்பு விவகாரத்திற்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்
Jul 23 2021 1:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செல்ஃபோன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் 4-வது நாளாக இன்றும் முடங்கின. இவ்விவகாரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று திரு. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
பெகாசஸ் செயலி மூலம் தலைவர்களின் செல்ஃபோன் உடையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதற்கு எதிராக கண்டன குரல்கள் வலுத்துள்ளன. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இன்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. போராட்டத்தில் கலந்துகொண்ட திரு. ராகுல் காந்தி, ஒட்டுக்கேட்பு விவகாரத்திற்கு திட்டமிட்டது யார் என்று கேள்வி எழுப்பினார். இது குறித்து விரிவான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். தனது செல்ஃபோனும் ஒட்டுக்கேட்கப்பட்டதாக தெரிவித்த திரு. ராகுல், உச்சநீதமன்ற தலைமை நீதிபதியும் இந்த சதியிலிருந்து தப்பவில்லை என்று கூறினார். பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருளை இந்தியாவுக்கே எதிராக பிரதமர் திரு. மோடியும், உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷாவும் பயன்படுத்தியுள்ளதாகவும், இது தேச துரோகம் என்றும் திரு. ராகுல் காந்தி தெரிவித்தார். இவ்விவகாரத்திற்கு பொறுப்பேற்று திரு. அமித்ஷா பதவிவிலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதனிடையே, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தால் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் 4-வது நாளாக இன்றும் முடங்கியது.