ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதுடன், விநியோகத்தை துரிதப்படுத்த வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு
Apr 23 2021 11:16AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவின் பல மாநிலங்களில், மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் வினியோகம் குறித்து, மத்திய அமைச்சரவை செயலாளர், உள்துறை செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர் உள்ளிட்ட மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, மாநிலங்களுக்கு வினியோகிக்கப்படும் ஆக்சிஜன் அளவு குறித்தும், வினியோக முறை குறித்தும் பிரதமர் திரு மோடிக்கு அதிகாரிகள் விளக்கினர்.
இதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் திரு. மோடி, மாநிலங்களுக்கு தங்குத் தடையின்றி ஆக்சிஜன் வினியோகம் செய்யப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் வினியோகத்தை, மேலும் அதிகரிப்பது தொடர்பான புதுமையான வழிமுறைகளை, மத்திய அமைச்சர்கள் ஆராய வேண்டும் என்றும், ஆக்சிஜன் வினியோகத்தில் எதாவது பிரச்னை இருந்தால், உள்ளூர் நிர்வாகத்திடம் கலந்து பேசி தீர்க்க வேண்டும் என்றும் பிரதமர் திரு மோடி கூறினார்.