சி.சி.ஐ முடிவை எதிர்த்து 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' வழக்கு : வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Apr 22 2021 5:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சர்ச்சைக்குரிய புதிய தனியுரிமைக் கொள்கை குறித்து விசாரணை நடத்தும் இந்திய போட்டி ஆணையத்தின் முடிவை எதிர்த்து 'வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக்' நிறுவனங்கள் தொடர்ந்துள்ள மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சமூக வலைதளமான 'வாட்ஸ் ஆப்', பயனாளிகளின் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது. இந்த புதிய கொள்கையை எதிர்த்து, பல வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. இந்த சூழலில், வாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கை, தொழில் போட்டியை தடுப்பதாக வேறுபட்ட குரல்களும் எதிரொலித்தன. இதுகுறித்து இந்திய தொழில் போட்டி ஆணையத்திடம் பல்வேறு நிறுவனங்களும் முறையீடு செய்தன. இதனை ஏற்றுக்கொண்ட ஆணையம், வாட்ஸ் ஆப் நிறுவனம் தொழில் போட்டியை தடுக்கிறதா என்பதை விசாரிக்க கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், 'வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக்' நிறுவனங்கள் தொடர்ந்துள்ள மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.