தடுப்பூசியின் இரண்டு டோசுகளை எடுத்துக் கொண்ட பிறகும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில், பாரத் பயோக்டெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியும் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகு, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அது தொடர்பான முழு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 20-ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில், ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், இதில், 93 லட்சத்து 56 ஆயிரத்து 436 பேர் முதல் டோசை எடுத்துக் கொண்டதாகவும், இவர்களில், வெறும் 4 ஆயிரத்து 208 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது பூஜ்யம் புள்ளி பூஜ்யம் நான்கு சதவீதம் மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 17 லட்சத்து 37 ஆயிரத்து 178 பேர் கோவாக்சின் இரண்டாவது டோசை போட்டுள்ளதாகவும், இதில், வெறும் 695 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது பூஜ்யம் புள்ளி பூஜ்யம் நான்கு சதவீதம் மட்டுமே என்றும் சுகாதாரத் துறை கூறியுள்ளது.
இதேபோல், நாட்டில், 11 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், இதில், 10 கோடியே 3 லட்சத்து 2 ஆயிரத்து 745 பேர், முதல் டோசை எடுத்துக் கொண்டதாகவும், இவர்களில், 17 ஆயிரத்து 145 பேருக்கு மட்டுமே நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது வெறும் பூஜ்யம் புள்ளி பூஜ்யம் இரண்டு சதவீதம் மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1 கோடியே 57 லட்சத்து 32 ஆயிரத்து 754 பேர் கோவிஷீல்டு இரண்டாவது டோசை போட்டுள்ளதாகவும், இதில், 5 ஆயிரத்து 14 பேருக்கு மட்டுமே வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது பூஜ்யம் புள்ளி பூஜ்யம் மூன்று சதவீதம் மட்டுமே என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.